கொந்தளித்த ராகுல் - லோக்சபாவில் பரபரப்பு - சபாநாயகர் மீது சரமாரி புகார்!
டெல்லி: எப்போதும் அமைதியாக, பின்வரிசையில் அமர்ந்து பேசும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று கொந்தளித்து விட்டார். லோக்சபாவில், அவையின் மையப் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி, சபாநாயகர் பாரபட்சமாக நடப்பதாக குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த நாட்டு மக்கள் ஒரே ஒருவருடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று இந்த நாடாளுமன்றம் கருதுவதாக நினைக்கிறேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை அவர் மறைமுகமாக சாடினார்.
ராகுல் காந்தியின் கோபாவேச பேச்சுக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி சர்வாதிகாரியோ அல்லது மதவாதியோ அல்ல. அவர் அப்படி இருந்திருந்தால் நாட்டு மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவை அவருக்குத் தந்திருக்க மாட்டார்கள் என்றார்.
மதக் கலவரப் பிரச்சினை
இன்று லோக்சபாவில் உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த மதக் கலவரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார்.
கோபமடைந்த ராகுல் காந்தி
இதையடுத்து கோபமடைந்த ராகுல் காந்தி வேகமாக சபாநாயகர் இருக்கை நோக்கி விரைந்தார். சபாநாயகர் இருக்கு முன்பு, அவையின் மையப் பகுதியில் நின்ற அவர் கோபமாகப் பேசினார். சபாநாயகர் பாரபட்சத்துடன் நடப்பதாக குற்றம் சாட்டினார்.
பாஜகவினர் கொந்தளிப்பு
ராகுல் காந்தியின் பேச்சால் பாஜக எம்.பிக்கள் கோபமடைந்தனர். ராகுல் குற்றச்சாட்டுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சபாநாயகரை நோக்கி கையைக் காட்டி ராகுல் காந்தி பேசியதாகவும் பாஜக குற்றம் சாட்டியது.
வெங்கையா நாயுடு ஆவேசம்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ராகுல் காந்தியை நோக்கி, அவையில் பிரச்சினைகளை எழுப்ப பல்வேறு வழிகள் , நடைமுறைகள் உள்ளன. ஆனால் இப்படி செய்யக் கூடாது. இது கண்டனத்துக்குரிய குற்றச்சாட்டு. இந்த நாடு மோடியின் கையில் பாதுகாப்பாக இருப்பதை சிலர் விரும்பவில்லை போலும் என்றார்.
பரபரப்பு - குவிந்த காங். எம்.பிக்கள்
ராகுல் காந்தி சபாநாயகர் இருக்கை முன்பு வந்து பேசியதைப் பார்த்த காங்கிரஸ் எம்.பிக்களும் அங்கு குவிந்து விட்டனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. அனைவரையும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கைக்குத் திரும்பச் சொன்னார். ஆனால் காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். பின்னர் ராகுல் அங்கிருந்து தனது இருக்கைக்குத் திரும்பினார்.
கார்கே பேச்சுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, இந்த அரசு பதவிக்கு வந்தது முதல் நாட்டில் மதக் கலவரங்கள் அதிகரித்து விட்டன என்று குற்றம் சாட்டினார். இதைக் கேட்டதும் கிட்டத்தட்ட அத்தனை பாஜக எம்.பிக்களும் எழுந்து கார்கேவுக்கு எதிராக கோஷமிட்டனர். அதேசமயம், சில காங்கிரஸ் எம்.பிக்கள் அவையின் நடுப்பகுதிக்கும் விரைந்தனர். ஆனால் இந்த முறை அவர்களுடன் ராகுல் காந்தி வரவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
தூக்க சர்ச்சைக்குப் பின்னர்
கடந்த மாதம்தான் லோக்சபாவில் விவாதத்தின்போது ராகுல் காந்தி தூங்கியதாக சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் ராகுல் காந்தி ஆவேசமாக நடுப்பகுதி வரை வந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரபட்சமாக நடக்கும் சபாநாயகர்
இன்று திடீரென அவையில் பொங்கி எழுந்தது குறித்து ராகுல் காந்தியிடம் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் கேட்டபோது நான் பலமுறை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்துள்ளேன் என்றார் ராகுல் காந்தி. மேலும் அவர் கூறுகையில், சபாநாயகர் முற்றிலும் ஒருதலைபட்சமாக நடக்கிறார். இதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதைத்தான் நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். விவாதத்தை ஏற்பதில்லை என்ற மனோபாவத்தில் இந்த அரசு உள்ளது.
அவர் மட்டும் பேசினால் போதுமா...
ஒருவர் மட்டும் பேசினால் போதும், அவர் பேச்சை மட்டும் நாடு கேட்டால் போதும் என்று இங்குள்ள சிலர் நினைக்கிறார்கள். எங்களைப் பேசவே அனுமதிப்பதில்லை என்றார் கோபமாக.