ஆதாரம் இருந்தால் ஜெயிலுக்கு அனுப்புங்கள், 'மீடியா டிரையல்' கூடாது: கனையா குமார் கோபம்
டெல்லி: தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கோஷங்கள் எழும்பியதாக தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ.) மாணவர் சங்கத் தலைவர் கனையாகுமார் டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வக்கீல்கள் குழு ஒன்று தாக்கியதோடு, வந்தே மாதரம் என கோஷமிட்டது.
இந்த சலசலப்புக்கு பிறகு கனையாகுமார் நீதிபதியிடம் கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 9ம் தேதி நடைபெற்ற (கோஷம்) சம்பவத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
சம்பவ வீடியோவை நான் பார்த்த பிறகுதான், வெளியில் இருந்து வந்த சிலர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இவ்வாறு கோஷமிட்டது தெரியவந்தது. அதுபோன்ற கோஷங்களுக்கு எனது ஆதரவு கிடையாது. இந்த நாட்டின் அமைதியை கெடுக்க யாரும் முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மீடியாக்களே விசாரணை நடத்தி எனக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்பி வருவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. நான் குற்றம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள். ஆதாரம் இல்லாவிட்டால், மீடியா டிரையல் (மீடியா விசாரணை) நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கனையாகுமார் தெரிவித்தார்.
இதனிடையே கனையா குமாருக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துவிட்டனர். இருப்பினும், மார்ச் 2ம் தேதிவரை, கனையாகுமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது கோர்ட். எனவே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.