ஜம்முவில் ராணுவ ஹெலிபேடை நோட்டமிட்ட பாக். ஆசாமி கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா செக்டாரில் உள்ள ராணுவ ஹெலிபேட் அருகே சுற்றித் திரிந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் தனது படைகளை எல்லைக்கு அருகே குவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா செக்டாரில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள அக்ரீசாக் கிரமாத்தில் இருக்கும் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தளம் அருகே பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தார்.
இதையடுத்து ராணுவத்தார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் அவர் பாகிஸ்தானில் உள்ள அஸ்திலியா கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் சுஹாக் என்பது தெரிய வந்துள்ளது.