காஷ்மீர் - ஷார்ஜா நேரடி விமான சேவை.. இந்திய விமானங்களுக்கு தடை போட்ட பாகிஸ்தான்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானச் சேவை பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த ஆண்டு முதலே சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அக், இறுதி வரை இருந்த இந்த தடை தற்போது நவம்பரிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் air bubble ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் கோஃபர்ஸ்ட் நிறுவனம் காஷ்மீர் ஸ்ரீநகரில் இருந்து ஷார்ஜாவுக்கு நேரடியாக விமானச் சேவையைத் தொடங்க முடிவு செய்தது. இந்த சேவைக்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தினால் விமான எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும். மேலும், பயண நேரமும் வெகுவாக குறையும்.

இதனால் பாகிஸ்தான் அரசிடம் இது தொடர்பாக அனுமதி கோரப்பட்டது. இருப்பினும், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு, ஸ்ரீநகர் - துபாய் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், அப்போது பாக். தனது வான்வெளி பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து அப்போது விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.
இதனால் எரிபொருட்கள் விலை அதிகரித்து விமான டிக்கெட் கட்டணமும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து, பயணிகளிடையே வரவேற்பு குறையவே இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அதேநிலை ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
கடந்த அக் 24ஆம் தேதி இந்த விமானச் சேவை தொடங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி வரை, பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தியே விமானங்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பாகிஸ்தான் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தான், குஜராத் வழியாக அரபிக்கடல் மேலே விமானங்கள் இயக்கப்பட்டன.
முன்னதாக இந்தியப் பிரதமர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்ற போது, ஆப்கன் வான்வெளியை பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டது. பிரதமர் மோடி பாக். வான்வெளியைப் பயன்படுத்த மட்டும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications