பெட்ரோல், டீசல் விலையை மேலும் 75 காசுகள் உயர்த்த சவுமித்ரா கமிட்டி பரிந்துரை
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதன் மூலம் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 75 காசு உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020-ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி ‘வாகன எரிபொருள் கொள்கை - 2025' அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:
தற்போது சென்னை, மும்பை, டெல்லி உள்பட 26 நகரங்களில் ‘யூரோ-4' (வெளியேறும் புகை அளவு)க்கு இணையான ‘பிஎஸ்-4' தரமுள்ள எரிபொருள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நகரங்களில் பிஎஸ்-3 தரமுள்ள எரிபொருள் தான் பயன்படுத்தப்படுகிறது.
2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் படிப்படியாக பிஎஸ்-4 அளவுக்கு எரிபொருள் தரத்தை உயர்த்த வேண்டும். இதற்கேற்றவாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்த ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிதிச்சுமையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 75 காசு உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.