காஷ்மீரில் இந்தியை அலுவல் மொழியாக்க கோரிய பொதுநல மனு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. என்னாச்சு?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் உருது மொழி அலுவல் மொழியாக உள்ளது. இந்நிலையில் 2 யூனியன் பிரதேசங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக்க அறிவிக்கக்கோரிய பொதுநல மனு மீது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக செயல்பட்டு வந்தது. சட்டப்பிரிவு 370 ன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது.
இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய பாஜக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
நாடு தழுவிய போராட்டத்திற்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு.. பாகிஸ்தானில் உச்ச கட்ட பதற்றம்!
அலுவல் மொழியாக உருது
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் உருது அலுவல் மொழியாக இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் உருது மொழியே அலுவல் மொழியாக இருந்து வருகிறது.
நீதிமன்றத்தில் பொதுநல மனு
இதனால் போலீஸ், சட்டத்துறை உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களில் உள்ள கோப்புகளும் உருது மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது. இந்நிலையில் தான் ஜக்தேவ் சிங் என்பவர் ஜம்மு காஷ்மீர் லடாக் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அதில், ‛‛இந்திய அரசியலமைப்பின் பிரிவு 343 மற்றும் 252வது பிரிவின் ஆணைப்படி ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் இந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
மனு தள்ளுபடி
இந்த பொதுநல மனு நீதிபதி அலி முகமது மாக்ரே, வினோத் சாட்டர்ஜி கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் என்பதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைப்புக்கு உட்பட்டதாகும். இதனால் இந்த மனுவை நாங்கள் ஏற்க முடியாது. இந்த மனுதாரர் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பை அணுக கோருகிறோம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்தி திணிப்பு
இந்த ஆண்டு செப்டம்பரில் இந்தி திவாஸ் அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழி முழு நாட்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பேசினார். இதனால் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக புகார்கள் எழுந்தன.
மத்திய கல்வி நிறுவனங்களில் பரிந்துரை
இதற்கிடையே தான் சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தான் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் இந்தியை அலுவல் மொழியாக்க பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.