கேரள மாநில முதல்வராகிறார் பினராயி விஜயன்: 93 வயதான அச்சுதானந்தன் ஏமாற்றம்
திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் கனவில் இருந்த 93 வயதான அச்சுதானத்தன் ஏமாற்றமடைந்துள்ளார்.
கேரள மாநில சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 தொகுதிகளில் வென்றது.

இதையடுத்து முதல்வரை தேர்வு செய்வதற்காக திருவனந்தபுரத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினரான பினராயி விஜயன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த அச்சுதானந்தன் இதனால் அதிருப்தி அடைந்தார். எனவே, இடதுசாரி மாநிலக் குழு கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

93 வயதான அச்சுதானந்தன் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்று இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். வெற்றி பெற்ற உடன் முதல்வர் நாற்காலி கிடைக்காத காரணத்தால் ஏமாற்றமடைந்துள்ளார்.
இதனிடையே தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் உம்மன் சாண்டி, தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் சதாசிவத்திடம் இன்று காலை அளித்தார். மக்களின் தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்வதாகவும் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications