18 அமைச்சர்களுடன், கேரள முதல்வராக பதவியேற்றார் பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், கேரளாவில் இடதுசாரி கூட்டணி சார்பில் பினராயி விஜயன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அச்சுதானந்தன் மீண்டும் முதல்வராக முன்மொழியப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டது.
இருப்பினும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அச்சுதானந்தனிடம் பினராயி விஜயன் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தின் முதல்வராக பினராயி விஜயன், திருவனந்தபுரம், சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பதவியேற்று கொண்டார்.
இவருக்கு ஆளுநர் சதாசிவம் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இவரை தவிர்த்து 18 அமைச்சர்களுக்கும் ஆளுநர் சதாசிவம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.