நடப்பாண்டில் மாநிலங்களுக்கு கூடுதலாக 21% நிதி ஒதுக்கீடு: முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி
டெல்லி: நடப்பாண்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக 21% நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக டெல்லியில் இன்று நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாநில முதல்வர்கள் மாநாடு கடைசியாக 2006ம் ஆண்டு நடந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது.
2014ல் மோடி அரசு அமைந்த போதே இந்த கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மண்டல வாரியாக நாட்டின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று 5 மண்டலங்களில் கூட்டம் நடத்தி அந்த மண்டலங்களை சேர்ந்த முதல்வர்களை சந்தித்து கருத்துக்களை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் 11-வது மாநில முதல்வர்கள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையாநாயுடு, நிதின் கட்கரி, மனோகர்பாரிக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயணசாமி, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய பின்னர் சற்று தாமதமாக கேஜ்ரிவால் வருகை தந்தார். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
#Delhi : @PMOIndia @narendramodi chairs the 11th meeting of Inter-State Council. pic.twitter.com/MxruLIO8YK
— All India Radio News (@airnewsalerts) July 16, 2016
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா போன்ற பெரிய நாட்டில் விவாதம், ஆழ்ந்த சிந்தனை, கொள்கைகள் பற்றிய ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று வாஜ்பாய் கூறினார்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாநிலங்களுக்கு கூடுதலாக 21 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.