ராஜ்பாத்தில் அசத்திய மோடி... அரை மணி நேரத்தில் 15 ஆசனம் செய்தார்
டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி 35 நிமிடங்களில் 15 ஆசனங்கள் செய்து அசத்தினார்.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
வெள்ளை நிற உடையில் மோடி சிறப்பாக யோகா செய்ததை பார்த்து பலரும் வியந்தனர்.
ஆசனங்கள்
64 வயதிலும் அவர் தனது உடலை வளைத்து யோகா செய்ததை பார்த்த பலரும் மோடி இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக உள்ளாரே என்று கூறி ஆச்சரியப்பட்டனர். மோடி 35 நிமிடங்களில் 15 ஆசனங்களை செய்து அசத்தினார்.
யோகா
யோகா என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மட்டும் அல்ல. அது அதையும் தாண்டிய விஷயம். அமைதியை நோக்கி மனதை செலுத்த செய்யும் பயிற்சியே யோகா என்று நிகழ்ச்சியில் மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.நா.
சர்வதேச யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எனது கருத்தை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மனித நலத்திற்காகவும், டென்ஷன் இல்லாத உலகிற்காகவும், நல்லெண்ணத்தை பரப்புவும் தான் இந்த யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மோடி கூறியுள்ளார்.
மோடி
யோகா நிகழ்ச்சியில் மோடி தனது கண்ணாடியை கழற்றிவிட்டு கழுத்தில் மூவர்ண ஷாலை அணிந்து அனைவருக்கும் முன்பாக நின்று யோகா செய்தார். யோகா செய்வதாலேயே தான் குறைவாகத் தூங்கினாலும் நெடுநேரம் பணிபுரிய முடிகிறது என்கிறார் மோடி.
கின்னஸ்
முன்னதாக 2005ம் ஆண்டு குவாலியரில் 29 ஆயிரத்து 973 மாணவர்கள் யோகா செய்தது தான் ஒரே நேரத்தில் அதிகமானோர் யோகா செய்ததாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ராஜ்பாத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.