கேதார்நாத்தில் சீரமைக்கப்பட்ட ஆதி சங்கரரின் சமாதி, திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
கேதார்நாத்; உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் 2013-ம் ஆண்டு வெள்ளத்தில் சேதமடைந்த ஆதி சங்கரரின் சமாதி மறுசீரமைக்கப்பட்டது. இந்த மறுசீரமைக்கப்பட்ட சமாதியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அத்துடன் ஆதி சங்கரரின் திருவுருவச் சிலையையும் பிரதமர் மோடி இன்று கேதார்நாத்தில் திறந்து வைத்தார்.
கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மறுசீரமைக்கப்பட்ட ஆதிசங்கரரின் சமாதியைத் தொடங்கிவைத்ததுடன் ஆதி சங்கரரின் உருவச்சிலையையும் திறந்துவைத்தார்.
அங்கு நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்புப் பணிகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேதார்நாத் கோவில் நிகழ்வோடு நாடு முழுவதும் உள்ள பல இடங்களிலிருந்தும், நான்கு கோவில்களிலிருந்தும், 12 ஜோதிர்லிங்கங்களுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேதார்நாத் கோவிலின் பிரதான நிகழ்வோடு இணைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு- ரூ400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்!
விவரிக்க முடியாத உணர்வு13
கேதார்நாத் ஆலயத்திற்கு வருகை தருவது விவரிக்க முடியாத மகிழ்ச்சி அளிக்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று நவ்ஷேராவில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினேன். 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை ராணுவ வீரர்களிடம் எடுத்து கூறினேன். கோவர்தன பூஜை தினமான இன்று பாபா கேதாரின் தெய்வீகப் பார்வையில் இன்று நான் நிற்கிறேன். சில அனுபவங்கள் மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இதனை பாபா கேதார்நாத் ஆலயத்தில் நான் உணர்ந்தேன். இங்கு கூடாரங்கள், வரவேற்பு மையங்கள் போன்ற புதிய வசதிகள் பூசாரிகள் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். புனித யாத்திரையின் தெய்வீக அனுபவத்தில் முழுமையாக ஈடுபட அவர்களை அனுமதிக்கும்.
2013 வெள்ள சேதம்
2013ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் கற்பனை செய்ய முடியாதவை. இங்கே வந்த மக்கள் நமது கேதார் ஆலயம் மீண்டும் எழுந்து நிற்குமா என்று நினைத்தார்கள், ஆனால் இது முன் எப்போதையும் விட கூடுதல் பெருமிதத்தோடு நிற்கும் என்று எனது உள்மனம் கூறியது. பகவான் கேதாரின் கருணையாலும் ஆதி சங்கராச்சாரியாவின் ஆசியாலும், பூஜ் நிலநடுக்கத்திற்குப்பின் நிர்வகிக்கப்பட்ட அனுபவத்தாலும் இக்கட்டான அந்தத் தருனத்தில் என்னால் உதவி செய்ய முடிந்தது. என் வாழ்க்கையின் முற்பகுதியில் என்னை வளர்த்தெடுத்த இந்த இடத்திற்கு சேவை செய்ய முடிந்தது, ஒரு நல்வாய்ப்பாகும். இந்தக் கோவிலின் மேம்பாட்டு பணிகளை அயராது தொடர்ந்த தொழிலாளர்கள், பூசாரிகள், பூசாரிகளின் குடும்பங்கள், அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி. இந்தப் பணிகளை முதலமைச்சர் ட்ரோன்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ந்து கண்கானித்து வந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பழமைவாய்ந்த பூமியில், நவீனத்துடன் தெய்வீகம் இணைக்கப்பட்டு, இந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றிருப்பது பகவான் ஆதிசங்கரின் இயற்கையான அருளாசியின் விளைவாகும்.
ஆதி சங்கரருக்கு புகழாரம்
சங்கர் என்பதற்கு நன்மை செய்யும் ஒருவர் என பெயர். இந்த இலக்கணம் ஆதி சங்கரால் நேரடியாக நீரூபிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை மிகவும் சிறப்புடையது, சாமானிய மக்களின் நலனுக்கு வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டிருந்தார். ஆன்மீகமும், சமயமும் ஒரே மாதிரியான, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்தத் தருணத்தில், இந்தியத் தத்துவம் மனிதகுல நலன் பற்றி பேசுகிறது. வாழ்க்கையை ஒட்டுமொத்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்த உண்மையின் மீது சமூகம் விழிப்புணர்வு பெற ஆதிசங்கராச்சாரியார் பணி செய்தார்.
அயோத்தி ராமர் கோவில்
நமது கலாச்சார பாரம்பரிய நம்பிக்கையின் மையங்கள் அனைவருக்கும் உகந்ததாகவும் மதிப்புமிகு பெருமிதம் கொள்வதாகவும் இன்று இருக்கின்றன. அயோத்தியில் ராமரின் மாபெரும் ஆலயம் உருவாகிவருகிறது, அயோத்யா தனது புகழை மீண்டும் பெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அயோத்யாவில் தீபோத்சவம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. இதிலிருந்து தொன்மையான இந்தியக் கலாச்சாரம் எவ்வாறு இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். இன்றைய இந்தியா அதன் பாரம்பரியத்தில் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்தியாவின் புகழ்மிக்க விடுதலைப்போராட்டம் தொடர்பான இடங்களுக்கும், புனித யாத்திரைக்கான பக்திசார்ந்த இடங்களுக்கும் பயணம் செய்யவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் உணர்வை அறிந்துகொள்ள வேண்டும்.
உத்தரகாண்ட் மேம்பாட்டு பணிகள்
21ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டு உத்தராகண்டுக்கு உரியது. சார்தாம் நெடுஞ்சாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் சார்தாம் சாலைத் திட்டப்பணிகள் அதிவேகமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணி தொடங்கப்பட்டுவிட்டதால் எதிர்காலத்தில் பக்தர்கள் கேதார்நாத் ஆலயத்திற்குக் கம்பிவட வாகனம் மூலம் வரமுடியும். இதன் அருகே புனிதமான ஹேம்குந் சாஹிபும் உள்ளது. ஹேம்குந் சாஹிபை எளிதாக தரிசனம் செய்வதற்குக் கம்பிவடப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புவியியல் ரீதியான சிரமங்களை விஞ்சி, உத்தராகண்டும் அதன் மக்களும் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை இன்று சாதித்துள்ளனர். இதுதான் உத்தராகண்டின் பலமும் சக்தியும் ஆகும். உத்தராகண்ட் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. தமது சொந்த உயரத்தைவிடவும் கூடுதலான உயரத்திற்கு உத்தராகண்ட் முன்னேறும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.