நின்றபடியே ஜீப்பில் பயணம்.. அகமதாபாத்தில் 8 கி.மீ தூரத்திற்கு மோடி-ஜப்பான் பிரதமர் இணைந்து ரோடு ஷோ!
அகமதாபாத்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது மனைவி அகி அபேயுடன் அரசு முறை பயணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத் வந்தார்.
வழக்கமான மரபுகளை மீறி விமான நிலையத்திற்கு வரவேற்பு அளிக்க வந்தார் பிரதமர் மோடி. ஷின்சோ அபேவை கட்டியணைத்து அவர் வரவேற்றார். ஜப்பான் பிரதமரை மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரும் வரவேற்றனர்.
இதைதொடர்ந்து அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதன்பிறகு, திறந்த ஜீப்பில் நின்றபடி, மோடி, ஷின்சோ அபே, அகி அபே ஆகியோர் சுமார் 8 கி.மீ தூரத்திலுள்ள புகழ் பெற்ற சபர்மதி ஆசிரமத்திற்கு பயணித்தனர்.
சாலையின் இருபுறங்களிலும் திரளாக மக்கள் கூடி நின்று, இந்திய, ஜப்பான் தேசிய கொடிகளை அசைத்து இரு நாட்டு பிரதமர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஷின்சோ அபே மோடியை போல குர்தா அணிந்து, மேலே கோட் போட்டிருந்தார்.
Gujarat: PM Modi & Japanese PM Shinzo Abe's road show to Sabarmati Ashram in Ahmedabad, underway. pic.twitter.com/eusZfayKL7
— ANI (@ANI) September 13, 2017
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே ரோடு ஷோ நடைபெற்றது. அகமதாபாத் நகரில் 9000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஷின்சோ அபி டெல்லி செல்லப்போவதில்லை என்பதால் முழு அளவிலான வரவேற்பும் அகமதாபாத்திலேயே நடந்தேறியது.
இதுவரை ஷின்சோ அபேவுடன் மோடி 11 முறை சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இருவருக்கும் நல்ல நட்புறவு உள்ளது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜப்பான் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தத நிலையில்தான், மரபுக்கு மாறாக ரோடு ஷோ நடத்தி, ஜப்பான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.