”ஸ்டாண்ட் அப் இந்தியா” கடனுதவி திட்டம்- நாளை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லி: இந்தியா முழுவதும் பெண்களுக்கும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூபாய் 1 கோடி கடன் வழங்கும் திட்டம் நாளை பிரதமரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும், பெண்களுக்கும் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூபாய் 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்ட "ஸ்டாண்ட் அப் இந்தியா" திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 5 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தையும், அதற்கான இணையதளப் பக்கத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.