மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஓய்வுபெற வேண்டும்: ஜனார்த்தன் திவேதி கருத்தால் சலசலப்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் 70 வயதைக் கடந்த தலைவர்கள் ஓய்வு பெற்று விட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன் திவேதி கூறிய கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியில் முதுபெரும் தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலும் அதே போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கியுள்ளது.
அடுத்த மாதம் 69 வயதைத் தொடும் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி, கட்சியில் இருந்து தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்கிறார். இதனால் 65 முதல் 70 வயது உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலில் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகி பிற பதவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறும் திவேதி, இந்த வயது வரம்பில் இருந்து நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றார்.
ஏற்கனவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டவர் திவேதி.
திவேதியின் இந்த கருத்தை மற்றொரு பரபரப்பு காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் ஆதரித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், திவேதி கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவருடைய சொந்த கருத்து
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து நான் கருத்து கூறவிரும்பவில்லை. கட்சியின் அமைப்பு முறையில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஏற்கனவே அந்தோணி அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது உள்ள நிலையே நீடிக்கும் என்றார்.