"ஸ்ரீரங்கம்".. ஒரே குழப்பமாக இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிய பிரவீன் குமார்!
டெல்லி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியாத அளவுக்கு குழப்பமான நிலை இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் குமார் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பிய விவரம் தெரிய வந்துள்ளது.
அவர் இப்படி அறிக்கை அனுப்புவதற்கு முன்பு அதிமுக தரப்பிலும் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட ஒரு மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் முடிவு தெரியும் வரை ஸ்ரீரங்கத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனராம்.
இதுகுறித்து பிரவீன் குமாரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டபோதுதான் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று அவர் பதில் அனுப்பி வைத்துள்ளாராம்.
தற்போது பிரவீன் குமார் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட் வக்கீல்களின் கோரிக்கை
தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று கிருஷ்ணமூர்த்தி, ராஜாராமன் ஆகிய இரு உச்சநீதிமன்ற வக்கீல்கள் சென்று ஒரு மனுவை அளித்தனர்.
தேர்தல் நடத்த வேண்டும்
அந்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா பதவியிழந்து, ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும், ஸ்ரீரங்கம் தொகுதியில், தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு, இன்னும் வெளியாகவில்லை. குறைந்தபட்சம், அந்த தொகுதி காலியிடமாகிவிட்டது என்று கூட, அறிவிக்கப்படவில்லை. எனவே, இவ்விஷயத்தில், தலைமைத் தேர்தல் கமிஷன் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருவரும் கோரியிருந்தனர்.
அவர்கள் சொன்னதைக் கேளுங்க
பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். அப்போது எங்களிடம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி, அதிமுக சார்பில், ஒரு மனு, தங்களிடம் அளிக்கப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.
கூடாது என்று கோருகிறதே அதிமுக
அதிமுக தரப்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில், மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அந்த வழக்கின் முடிவு தெரியும் வரை, ஸ்ரீரங்கம் தொகுதியில், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.
விளக்கம் கேட்டதற்கு பிரவீன் குமார் தந்த பதில்
இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரவீன் குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு அவர் அனுப்பிய பதிலில்,
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, உடனடியாக, முடிவு எடுக்க முடியாத அளவுக்கு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உடனடியாக பதவி போய் விடும்
ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஊழல் வழக்கில், தண்டனை பெற்றவுடனேயே, மக்கள் பிரதிநிதிகள், தங்களது பதவிகளையும் இழந்துவிடுவார்கள். இதற்கு, முன்னுதாரணங்கள் உள்ளன.
இதை சாக்காக வைக்கக் கூடாது
எனவே, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதை மட்டுமே காரணமாக வைத்து, ஜெயலலிதா போட்டியிட்டு, தற்போது காலியாக உள்ள, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தாமல் இருப்பது சரியல்ல. தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம், மீண்டும் விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கையை, தலைமைத் தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டுமென்று, கோரிக்கை வைத்துள்ளோம் என்று இருவரும் கூறினர்.
இதற்கு முன்பு இப்படி குழப்பம் வரலையே
ஆனால் இதற்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினராக இருந்த செல்வகணபதி, ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதும் உடனடியாக அவரது பதவி பறி போய் விட்டது. இதை மாநிலங்களவை செயலாளரும் உடனடியாக அறிவித்தார். லாலு விவகாரத்திலும் இதுதான் நடந்தது.
ஆனால் ஜெயலலிதா விவகாரத்தில் ஏன் இவ்வளவு "குழப்பம்" என்று தெரியலையே... புரியலையே!