ஜனாதிபதி தேர்தல்: ஜாதிக்கான சண்டை இல்லை.. கொள்கைகளுக்கான மோதல்.. மீராகுமார் !
பெங்களூர்: குடியரசுத் தலைவர் தேர்தலை சித்தாந்தத்துக்கும் அதற்கு எதிரான, மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கும் இடையேயான போட்டி என்று மீராகுமார் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும்
17-ந் நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்.
காங்கிரஸ் தலைமையில் அமைந்த 17 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் களம் இறக்கப்பட்டு உள்ளார். மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இருவருமே பிரபலமான தலித் தலைவர்கள். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் தேர்தல் சூடுபிடித்து உள்ளது.
இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்தவகையில் பெங்களூர் வந்த மீராகுமார் ஓன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், குடியரசுத் தலைவர் தேர்தலை சித்தாந்தத்துக்கும் அதற்கு எதிரான, மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கும் இடையேயான போட்டி என்று கூறினார்.
மேலும், எல்லா உயிரினங்களுக்கும் மதத்திற்கும் இடையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்கும், கண்ணியத்திற்கும், உரிமைகளுக்கும் எனது வாழ்நாளை அர்பணித்து பணி செய்து வருகிறேன் என்று கூறினார்.
முன்னதாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தலித் அடையாளம் பூசப்பட்டுள்ளது அவமானம் என்று கூறினார். இந்த தேர்தல் நமது நாட்டின் கொள்கைகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மீது நடக்கும் தேர்தல். இவைதான் நாட்டின் சமூக நீதியும் ஆகும். மேலும், இது புனித தன்மையாக நாம் போற்றும் இந்திய பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது. எனவே இவற்றையெல்லாம் ஆராய்ந்து எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலனுக்காக எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.