மறக்க முடியாத காங்கிரஸின் எமர்ஜென்சி....ஜனநாயகத்தைப் பாதுகாத்த மக்கள்... பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த எமர்ஜென்சியை நினைவுபடுத்திய பிரதமர் மோடிக்கு, இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளதாக காங்கிரஸ் கட்சி பதிலுக்குத் கருத்து தாக்குதல் தொடுத்துள்ளது.
டெல்லி: பொதுமக்களுடன் ரேடியோவில் பிரதமர் மோடி உரையாடும் மன் கி பாத் உரையில், இன்று 1975ம் ஆண்டின் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நெருக்கடி நிலையை நினைவுபடுத்திப்பேசினார்.
இதில் கொந்தளித்துள்ள காங்கிரஸ், இப்போதைய பாஜக தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சின்போது மோடி , ஒடிசா மாநிலம், பூரி ஜெகந்நாதர் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. அதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார். 100 மணி நேரத்தில் 10 லட்சம் கழிவறைகள் கட்டிய விசாகப்பட்டினம் மக்கள், அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் கூறினார்.
காங்கிரஸ் அரசின் நெருக்கடி நிலை
1975ம் ஆண்டில் ஜூன் 25ம் தேதி நள்ளிரவு நெருக்கடி நிலையை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. இது இந்திய மக்களிடையே கருப்பு நாளாக நினைவில் பதிந்துள்ளது.
யாரும் மறக்கவில்லை
இதனை இந்தியர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்தனர்.
ஜனநாயகமே நமது கலாச்சாரம்
ஜனநாயகம் என்பது நமது ஆட்சிமுறை மட்டுமல்ல. நமது கலாசாரமே ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆனதுதான். மிசா காலத்தில் ஜனாநாயகத்துக்கு ஊறுவிளைவித்த அவசர சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் நன்மைகளைப் பற்றி மக்களை உணரவைத்த பல சம்பவங்களையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியமாகும்.
சித்ரவதைக்கு ஆளான தலைவர்கள்
ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட மக்கள் தலைவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாகினர். ஊடகத்தின் குரல் நசுக்கப்பட்டது." என்று பேசினார் பிரதமர் மோடி .
காங்கிரஸ் கண்டனம்
ஆனால், இந்த கருத்துக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியின் கருத்து பாரபட்சமாக உள்ளதென்றும், தற்போது அவர் எத்தகைய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளார் என்பதைக் கவனிக்காமல், மற்றவர்களை குற்றம்சாட்டி பேசுகிறார்.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை
ஆம், நாம் எமர்ஜென்சியை மறந்துவிட்டோம், ஆனால் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையானது நாட்டில் நிலவுகிறது. மீடியாக்கள் இலக்காக்கப்படுகிறது, மீடியாக்கள் மீது சோதனைகள் நடக்கிறது, இவைகளை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில்தான் பட்டியலிட முடியும், என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாம் வடக்கன் கூறியுள்ளார்.