பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது கால்களைக் காட்டும் வகையில் உடையணிந்து வந்ததை சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர்.
அவர் பிரதமரை அவமதித்து விட்டார் என்று சில ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அவரைக் கண்டித்தனர்.
ஆனால், பிரியங்கா சோப்ரா, இதற்கெல்லாம் மன்னிப்புக் கோரும் தொனியில் இல்லாமல், தனது தாயும் அவரும் குட்டையான உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, இன்றைக்கான கால்கள் என்று தலைப்பிட்டு பதிலடி தந்திருக்கிறார்.
கடந்த காலங்களில், பிற இந்திய நடிகைகளும் தங்களது உடை தெரிவிற்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
2014ல் ஒரு இந்திய பத்திரிகை , தீபிகா படுகோனின் மார்பகப் பகுதி தெரியும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டதற்காக அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
''ஆம். நான் ஒரு பெண். எனக்கு மார்பகங்கள் உண்டு. அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை உள்ளதா?,'' என்று தீபிகா ட்விட்டரில் அந்த செய்தித்தாளுக்கு பதில் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பல நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தொலைக்காட்சி சீரியலான பே வாட்ச்சின் (Baywatch ) ஹாலிவுட் திரைப்படத்திலும் , அமெரிக்க தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோ(Quantico)விலும் நடித்துள்ள பிரியங்கா, பெர்லினில் பிரதமர் மோடியுடன் உள்ள புகைப்படத்தில், '' அவரது வேலை நெருக்கடியிலும், என்னை சந்திப்பததற்காக நேரம் தந்ததற்கு நன்றி'' என்று பேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததை அடுத்து இந்த சர்ச்சை தொடங்கியது.
அவர் பதிவிட்ட சிலமணி நேரத்திற்குள், பிரியங்காவின் ''மரியாதைக் குறைவான உடை'' குறித்த கருத்துகள் வரத்தொடங்கின. பலர் பிரியங்கா ''மோதி மற்றும் அவரது பக்தி மிக்க தொண்டர்களை'' அவமதித்தார் என்று கருத்துகளை வெளியிட்டனர்.
பதிவிட்ட ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வதற்கு மாறாக, பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பலர் 'கிளாசி கம்பேக் ("classy comeback") , அதாவது நளினமான பதிலடி என்று தெரிவித்துள்ளதற்கு ஏற்றவாறு தனது தாயுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் இருவரது கால்கள் தெரியுமாறு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவுக்கு நான்கு மணிநேரத்திற்குள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்தனர்.
பிரியங்கா தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு நேரடியாக பதில் அளிக்காத அதே நேரத்தில் அவரது விசிறிகள் அவருக்கு ஆதரவு தரும் வகையில் பதிலடி தந்து வருகின்றனர்.
நரேந்திர மோதி இது போன்ற கவர்ச்சிப் பிரபலங்களை சந்திக்க நேரம் ஒதுக்கியது குறித்தும் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுந்திருக்கின்றன.
இதையும் படிக்கலாம் :
காபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்
பலன் தந்ததா மோதியின் மேக் இன் இந்தியா?
சென்னை ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் புகார்