பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது.. நாளை ஒரே கட்டமாக தேர்தல்
சண்டிகர்: பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு 10 ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் வலுவாக களத்தில் உள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல் நலக்குறைவால் இந்த முறை பஞ்சாப்பில் பிரசாரம் செய்யவில்லை. ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களில் தனித்து போட்டியிடும் நிலையில் அதன் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.
டெல்லி முதல்வரும் கட்சி தலைவருமான கேஜ்ரிவால் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டார். அனல் பறந்த பிரசாரம், நேற்று மாலை 5 மணிக்கு ஓய்ந்தது.
இதேபோல, 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகராஷ்டிரவாடி கோமந்த கட்சி, கோவா குரக்ஷா மஞ்ச் ஆகியவை சிவசேனா கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன.
இங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சரும், கோவா முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனாலும் தற்போதைய முதல்வரான லட்சுமிகாந்த் பர்சேகரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. மனோகர் பாரிக்கரை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்பதுதான் பாஜக கணக்காக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முன்னாள் முதல்வர்களான ரவி நாயக், திகாம்பர் காமத், பிரதாப்சிங் ரானே, லுய்ஸின்ஹோ பெலெய்ரோ ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இந்த மாநிலத்திலும் நடந்து வந்த தீவிர பிரசாரம், நேற்று மாலை 5 மணிக்கு ஓய்ந்தது. தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.
இரு மாநிலங்களிலும் நாளை சனிக்கிழமை ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.