ரஷ்யா அதிபர் புதின் டிச.10-ந் தேதி இந்தியா வருகை தருகிறார்!
டெல்லி: ரஷ்யா அதிபர் புதின் வரும் 10-ந் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
டெல்லிக்கு வரும் 10-ந் தேதி வருகை தரும் ரஷ்யா அதிபர் புதின், 15வது இந்தியா- ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார் என்றும் இரண்டு நாட்கள் இந்தியாவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் புதினை உரையாற்ற வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் பராக் ஓபாமா இந்தியா வந்த போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசினார்.
இந்தியாவுடன் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் மேம்பாடு பெறச் செய்யும் ஒப்பந்தங்களை இந்த பயணத்தின் போது புதின் மேற்கொள்வார். இது தவிர இந்தியா - ரஷ்யா இடையிலான வைரத் தொழில் தொடர்பான ஒப்பந்தத்திலும் புதின் கையெழுத்திடுவார்.
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் வயில்களில் ஓ.என்.ஜி.சி. முதலீடு செய்யவும் புதின் கையெழுத்திடும் ஒப்பந்தங்கள் உதவியாக இருக்கும். அது போல மும்பையில் வைரம் பட்டைத் தீட்டும் தொழில் பூங்கா அமைக்கவும் புதினுடன் செய்யப்படும் ஒப்பந்தம் வழிவகுக்கும்.
மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன், முதலாக புதினை சந்தித்த போது கூடங்குளத்துக்கு வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை புதின் ஏற்று இருந்தார்.
எனவே அடுத்த வாரம் டெல்லி வரும் புதின் கூடங்குளத்துக்கும் வருகை தரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி கூடங்குளம் பயணத்திட்டத்தை புதின் கைவிட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இன்றைய செய்திக் குறிப்பிலும் கூடங்குளம் பயணம் தொடர்பாக எதுவும் இடம்பெறவில்லை.