பாலியல் புகார்: 'நோபல்' பச்சௌரியிடம் துருவித் துருவி கேள்வி கேட்ட போலீசார்
டெல்லி: அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் 29 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெல்லி போலீசார் பிரபல சுற்றுச்சூழல் நிபுணரான ஆர்.கே. பச்சௌரியிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தில் (டிஇஆர்ஐ) பணிபுரியும் 29 வயது பெண் ஒருவர் பிரபல சுற்றுச்சூழல் நிபுணரான ஆர்.கே. பச்சௌரி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக டெல்லி போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி புகார் அளித்தார். தான் டிஇஆர்ஐ நிறுவனத்தில் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்ததில் இருந்தே பச்சௌரி தனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் பச்சௌரி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பச்சௌரி ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். மேலும் டிஇஆர்ஐ நிறுவன தலைவரான அவர் காலவரையற்ற விடுப்பில் சென்றுள்ளார்.
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று பச்சௌரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு சென்ற போலீஸ் குழுவினர் அவரிடம்
வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் அவரிடம் 50 கேள்விகள் கேட்டுள்ளனர்.
2007ம் ஆண்டு ஐபிசிசி அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அந்த பரிசை ஐபிசிசி சார்பில் பெற்றவர் பச்சௌரி என்பது குறிப்பிடத்தக்கது.