டெல்லியில் துப்புரவு ஊழியர்களுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து ராகுல் "தர்ணா"
டெல்லி: டெல்லியில் ஊதியம் கோரி போராடுகிற மாநகராட்சியின் துப்புரவு ஊழியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுப்புக்கு போய்விட்டு வந்த பின்னர் அதிரடியாகத்தான் செயல்பட்டு வருகிறார்...
நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக கர்ஜித்தது; மாநிலங்களுக்கு போய் விவசாயிகளை சந்திப்பது என வெளுத்து வாங்கி வரும் ராகுல் காந்தி இன்று டெல்லிவாசிகளை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் ஊதியம் கோரி போராடி வருகின்றனர். இதனால் டெல்லி நகரைச் சுற்றி 15 ஆயிரம் டன் குப்பை தேங்கியுள்ளது.
இந்த குப்பைகளால் டெல்லி வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு தருகிறேன் எனக் கூறியும் துப்புரவு தொழிலாளர்கள் நடத்திய போராட்ட களத்துக்கு நேரில் சென்றார் ராகுல்.
அங்கு, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள், நான் எப்போதும் உங்கள் பக்கம் நிற்பேன் என்ற ஆறுதல் கூறிய ராகுல், மத்திய அரசும், மாநில அரசும் செயல்படாத அரசுகளாகிவிட்டன என்று குற்றம் சாட்டிய கையோடு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.
சுமார் அரை மணிநேரம் தர்ணா போராட்டம் நடத்திய பின்னர் ராகுல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.