காந்தியை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்.தான்: வழக்கை தொடர்ந்து நடத்தவே விருப்பம் - ராகுல்
டெல்லி: மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ். எஸ். தான் என்ற கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த ராகுல் காந்தி, அதுதொடர்பான வழக்கை தொடர்ந்து சந்திக்க விருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம், சோனாலே நகரில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். மக்களே காந்தியை கொலை செய்தனர் என்றார். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் நிர்வாகி ராஜேஷ் குந்தே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பான்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் போது ராகுல் காந்தி தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
எனினும், ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதாக கபில் சிபல் கூறினார். மேலும், உள் நோக்கத்தோடும், தீய எண்ணத்தோடும் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கபில் சிபல்.
இதையடுத்து, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ராஜேஷ் குந்தேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தி ஏதேனும் பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ய விரும்பினால் நான்கு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.