சர்ச்சைக்குரிய அவசர சட்டம் ராகுல் விமர்சனம் குறித்து மன்மோகன் சிங் கருத்து
டெல்லி: தண்டனை பெற்ற கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தண்டனை பெற்ற கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக பதவி பறிப்பில் இருந்து குற்ற வழக்கில் தண்டிக்கப்படுகிற எம்.பி., எம்.எல்.ஏ.,க்களைக் காக்க வகை செய்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. அதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த அவசர சட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியிடம் மட்டுமின்றி, ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜனாதிபதியும் ஆட்சேபம்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவசர சட்டத்துக்கு இப்போது என்ன அவசர அவசியம் வந்தது? என மூத்த அமைச்சர்களை வரவழைத்து கேள்வி எழுப்பியிருந்தார்..
ராகுல் விமர்சனம்
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் அவசர சட்டம், முட்டாள்தனமானது, அதை கிழித்து எறிய வேண்டும் என்று ஆவேசமாக கருத்து வெளியிட்டார்.
தூங்கிய மன்மோகன்சிங்கை எழுப்பிய பத்திரிகையாளர்கள்
ராகுல் இந்த கருத்தை வெளியிட்ட நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்த மன்மோகன் சிங்கின் கருத்தை அறிவதற்காக பத்திரிகையாளர்கள் அங்கே குவிந்து விட்டனர். அவர்கள் பிரதமரின் உதவியாளர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி தகவல் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் மன்மோகன் சிங் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அமைச்சரவை விவாதிக்கும்
அதில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தொடர்பான அவசர சட்டம், பொது விவாதங்களை உருவாக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எனக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் கருத்தும் வெளியிட்டு உள்ளார். அரசு இது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுள்ளது. இதில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, நான் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வாபஸ்?
ராகுல் விமர்சனத்தை தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள அவசர சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.