ரயில் பயணிகளே உஷார்.. நண்பர்களுக்காக துண்டு போட்டு சீட் பிடித்த 4பேர் கைது! 6 மாத சிறைக்கு வாய்ப்பு
மும்பை: ரயிலில் நண்பர்களுக்காக இடம் பிடித்து வைத்திருந்த நால்வரை மும்பையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டத்தில் இடமுள்ளது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
கூட்டம் அதிகமுள்ள லோக்கல் பஸ்கள், ரயில்களில் உடன் பயணிக்கும், உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், முதலில் வண்டியில் ஏறுவோர் சீட் பிடிப்பது வழக்கம். அடித்து பிடித்து உள்ளே வரும், பிற பயணிகள், சீட் கேட்டால், "ஆள் வருகிறது.." என்று அவர்கள் கூலாக சொல்வது வழக்கம்.
சீட் பிடிக்க சர்க்கஸ்
சிலர் வண்டிக்குள் ஏறுவதற்கு முன்பே, கர்ச்சீப், துண்டு போட்டுக்கொண்டு ஜன்னல் பக்கமாக நின்று வேறு நபர்கள் உட்காராமல் கண்காணிப்பர். நம்மூரில் இன்னும் ஒருபடி மேலேபோய், கைக்குழந்தைகளை ஜன்னல் வழியாக சீட்டில் தூக்கிபோடும் நிலையும் வந்துவிட்டது. ஆனால் இதற்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ளது இந்தியன் ரயில்வே.
4 பேர் கைது
மும்பை போரிவாலி-சர்ச்கேட் நடுவேயான லோக்கல் ரயிலில், சக நண்பர்களுக்காக இடம் பிடித்து வைத்திருந்த நால்வரை ரயில்வே பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. அவர்கள் மீது, இந்திய ரயில்வே சட்டம் 1989ன், 145(c) பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறு மாதம் சிறை
பிற பயணிகளுக்கு இடையூறு செய்வோரை சந்திக்க வழி செய்யும் இச்சட்டத்தின்கீழ், குற்றவாளிகளுக்கு 6 மாதங்கள் சிறை மற்றும் அதிகபட்ச அபராதம் ரூ.500 செலுத்த வேண்டிவரும்.
சண்டை வேண்டாமே
இதுகுறித்து புகார்தாரர் மாலேகர் கூறுகையில், "இடம் பிடித்தல் காரணமாக, பயணிகள் நடுவே தகராறு வெடிக்கிறது. பிறருக்கு சங்கடம் ஏற்படுகிறது. எனவேதான் புகார் அளிக்க முன்வந்தேன்" என்றார். இதனிடையே கைதான நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நம்மூரிலும் ரயில்வே படையினர் இந்த சட்டத்தை தீவிரமாக கையில் எடுத்தால் பதற்றமில்லா பயணம் அமையும்தானே?