நுபுர்சர்மாவுக்கு ஆதரவு! தையல்காரரை படுகொலை செய்து வீடியோ வெளியிட்ட இருவர்! பதற்றத்தில் ராஜஸ்தான்
உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி தையல்காரரின் தலையை துண்டித்து படுகொலை செய்த 2 பேர் வீடியோ வெளியிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் உதய்ப்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மால்டாஸ் தெருவில் வசித்து வருபவர் கண்ணையா லால்.
கண்ணையா லால் தையல் தொழிலாளி ஆவார். இவரிடம் இன்று 2 பேர் தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 2 பேர் கண்ணையா லால் மீது தாக்குதல் நடத்தினர்.
கொடூரம்.. மதம்விட்டு மதம் காதல்! துடிக்க துடிக்க 20 வயது இளம்பெண் படுகொலை..பெற்றோர் வெறிச்செயல்
தலை துண்டித்து படுகொலை
மால்டாஸ் தெருவில் வைத்து கண்ணையா லாலை கத்தியால் இரு நபர்கள் சரமாரியாக வெட்டினர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு மத்தியில் அவரை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதை பார்த்த மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதற்கிடையே கொலை தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோ வெளியிட்ட நபர்கள்
மேலும், கொலையாளிகள் கொலை தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர். அதில் இருவரும் கண்ணையா லால்லை கொலை செய்ததாக தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் கண்ணையா லாலை கொலை செய்தவர்களின் பெயர்கள் முகமது ரியாஸ் அக்தர் மற்றும் முகமது கோஷ் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கொலைக்கான காரணம்?
இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இவரை பாஜக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இதற்கிடையே கண்ணையா லால், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பதற்றம்- போலீஸ் குவிப்பு
இந்த கொலை சம்பவம் உதய்ப்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மால்டாஸ் தெருவில் கடைகள் அடைக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் உதய்ப்பூரில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைதி காக்க வலியுறுத்தல்
இதுபற்றி முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‛‛ உதய்ப்பூரில் நடந்த கொலை சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான வீடியோவை பகிராமல் மக்கள் அமைதி காக்க வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் உதய்ப்பூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இணையசேவை முடக்கம்
இதற்கிடையே கொலை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பதற்றம் அதிகரித்து அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் சூழல் உள்ளது. இதனால் உதய்ப்பூரில் அடுத்த 24 மணிநேரத்துக்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பதிவுகளை போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.