தருண் விஜய்க்கு எதிராக தேசத் துரோக வழக்கு பதிவு செய்யுங்கள்.. லோக்சபாவில் கொதித்த கார்கே
தென் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியர்களா இல்லையா என்பதை பாஜக தெளிவாக கூற வேண்டும். தருண் விஜய் மீது பாஜக எடுத்த நடவடிக்கை என்ன என்று கூற முடியுமா என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
டெல்லி: தென் இந்தியர்களை கறுப்பர்கள் என பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் குறிப்பிட்டது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மக்கள் கறுப்பாகத்தான் உள்ளனர், நாங்கள் சேர்ந்து வசிக்கவில்லையா, நாங்கள் நிற வெறி பிடித்தவர்கள் இல்லை என கூறியிருந்தார் தருண் விஜய்.
கடும் கண்டனங்களை தொடர்ந்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி இன்று லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தால் லோக்சபா ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு, அவை கூடியபோது, எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (கர்நாடகாவை சேர்ந்தவர்) பேசுகையில், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள், இந்தியர்களா இல்லையா என்பதை பாஜக தெளிவாக கூற வேண்டும். நாட்டை பிளவுபடுத்த திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். இதற்கு அரசு துணை நிற்கிறது. தருண் விஜய் மீது பாஜக எடுத்த நடவடிக்கை என்ன என்று கூற முடியுமா?
இவ்வாறு கார்கே கூறியதும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒரு அறிக்கையை தாக்கல் செய்து பேசினார். அவர் கூறுகையில், இந்தியா, ஒரு மதசார்பற்ற நாடு. ஜாதி, மதம், நிறம் போன்றவற்றால் பாகுபாடு பார்ப்பதை ஏற்க முடியாது. பாகுபாடு பார்ப்பது என்பது மன்னிக்க முடியாதது. இருப்பினும் தருண் விஜய் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இருப்பினும் மல்லிகார்ஜுன கார்கே சமாதானமடையவில்லை. தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேட்டியளித்த தருண் விஜய் மீது தேசத் துரோக பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார் கார்கே.
இதனால் அவையில் ஆளும் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நடுவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தருண் விஜய் ஏற்கனவே இதுகுறித்து விளக்கம் அளித்துவிட்டார் என்றார். ஆனால் கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.