கர்நாடகாவில் நடைபெறப்போவது ராமர் vs அல்லா தேர்தலாம்.. பற்ற வைத்த பாஜக எம்எல்ஏ.. பாய்ந்தது வழக்கு
பெங்களூர்: இந்துக்களின் தெய்வமான ராமருக்கும், இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாவுக்கும் நடுவேயான தேர்தல் என்று, சட்டசபை தேர்தலை வர்ணித்த கர்நாடக பாஜக எம்எல்ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபற உள்ளது. அந்த ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே பெரும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, மத பிரச்சினைக்கு பெயர் பெற்ற தென்கனரா மாவட்டத்தின் பன்ட்வால் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடத்தில் சமீபத்தில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பாஜகவை சேர்ந்தவரான, கார்க்காளா தொகுதி எம்எல்ஏ சுனில்குமார் பங்கேற்று உரையாற்றினார்.
ராமர் vs அல்லா பேச்சு
சுனில்குமார் தனது பேச்சின்போது, பன்ட்வால் தொகுதி எம்எல்ஏவான காங்கிரசின் ரமானாத் ரை, எந்த ஒரு பொதுக்கூட்டமாக இருந்தாலும், தன்னை வெற்றிபெறச் செய்தது இஸ்லாமிய மக்கள் என நன்றி தெரிவித்து பேசி வருகிறார். எனவே, இந்த முறை, ராமருக்கு வாக்களிப்பதா அல்லது அல்லாவுக்கா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். பன்ட்வால் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தல் ஸ்ரீ ராமர் மற்றும் அல்லா நடுவேயானது. இவ்வாறு அவர் பேசினார்.
பணிகளை பற்றி பேசுங்கள்
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ரமானாத் ரை கூறுகையில், சுனில்குமார் இப்படி பேசியிருக்க கூடாது. அரசியல் சாசனப்படி, தேர்தல் என்பது மதம் தலையிடாததாக இருக்க வேண்டும். நான் எனது தொகுதியில் பணியாற்றியுள்ளேனா இல்லையா என்பது குறித்துதான் எதிர்க்கட்சிகளின் விவாதம் இருக்க வேண்டும். மதம் சார்ந்து இருக்க கூடாது.
காந்தி கொள்கை
நாங்கள், மகாத்மா காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள். 'ஈஸ்வர் அல்லா தேரே நாம்' என்ற கொள்கை கொண்டவர்கள். பாஜக எப்போதுமே வகுப்புவாத அடிப்படையில் வாக்குகளை கேட்கிறது, இவ்வாறு ரமானாத் ரை தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
இதனிடையே, மதங்களுக்குள் சண்டை மூட்டிவிட முயன்றதாக எம்எல்ஏ சுனில்குமார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டம், பிரிவு 153 (a) மற்றும் 505 (2) ஆகியவற்றின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.