திலீப் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு... 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்!
கொச்சி: நடிகை பாவனா கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மிகக் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கற்பழிப்பு முயற்சி என்று கூட பதிவு செய்யாமல், நேரடியாக கற்பழிப்பு வழக்கு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதாகவும், பாவனா மீது கொண்ட தனிப்பட்ட பகையே திலீப்பின் சதித்திட்டத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திலீப் கொச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவா துணை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கபட்டார்.
9 பிரிவுகளில்...
பாவனா கடத்தலில் திலீப் நேரடியாக ஈடுபடாத நிலையிலும் அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கடுமையான சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 120(பி) (கூட்டு சதி), 342 (தவறான தகவல்களை தந்தது), 376(டி) (கூட்டாக கற்பழித்தல்), 411 (ஆவணங்களை மறைக்க முயற்சி), 506(1) (மிரட்டல்), 201 (வழக்கு தொடர்பான தடயங்களை மறைத்தல்), 212 (குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல்), 34 (திட்டமிட்டு செயல்படுதல்) என உள்ளிட்ட 9 பிரிவுகளில் திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் சிறை
கூட்டு கற்பழிப்பு சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்டநிபுணர்கள் தெரிவித்தனர்.
முகேஷுக்கும் ஆபத்து
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷிடம் விசாரிக்க உள்ளனர். பல்சர் சுனில் இதற்கு முன் முகேஷிடம் ரைவராக பணியாற்றி உள்ளார்.
மஞ்சு வாரியார்
நடிகர் திலீப் சிறையில் அடைக்கபட்டதை தொடர்ந்து அவரிடம் வளரும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோரி அவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.
கைதி எண் 523
திலீப் சிறையில் 2 ம் எண் செல்லில் அடைக்கபட்டு உள்ளார். அவருக்கு கைதிகள் எண் 523 வழங்கபட்டு உள்ளது.