பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த ரயில்வே அமைச்சர் மகன் கார்த்திக் கவுடா காவல் நிலையத்தில் ஆஜர்!
பெங்களூர்: நடிகையை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக இருந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவு இன்று போலீசில் ஆஜரானார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கும், குடகு மாவட்டம் சோமவார்பேட்டையை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் நடந்து முடிந்த சில மணி நேரத்தில் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து ஏற்கனவே ரகசிய திருமணம் செய்திருப்பதாக கன்னட நடிகை மைத்திரி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.

பலாத்கார வழக்கு
இதுதொடர்பாக கார்த்திக் கவுடாவுக்கு எதிராக ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திலும் மைத்திரி புகார் கொடுத்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடா மீது பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விசாரணைக்கு ஆஜராகவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கார்த்திக் கவுடாவுக்கு ஆர்.டி.நகர் போலீசார் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

முன் ஜாமீன் மனு
இந்த நிலையில், நடிகையை பலாத்காரம் மற்றும் மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகமல் இருந்து வரும் கார்த்திக் கவுடாவுக்கு எதிராக பெங்களூர் 8வது கூடுதல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆர்.டி.நகர் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

பிடிவாரண்ட்
அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் கார்த்திக் கவுடாவை கைது செய்யும்படி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு, பெங்களூர் நகர 63வது செஷன்ஸ் கோர்ட்டில் கார்த்திக் கவுடா தாக்கல் செய்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை, வாத பிரதிவாதம் நடந்தது.

தீர்ப்பு
இதையடுத்து தீர்ப்பை சனிக்கிழமை அளிப்பதாக நீதிபதி முதிகவுடர் அறிவித்தார். அன்று காலை நீதிபதி இந்த மனு மீதான தீர்ப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு தீர்ப்பு திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நீதிபதி தனது தீர்ப்பை கடந்த திங்கள்கிழமை வழங்கினார்.

நிபந்தனை ஜாமீன்
ரூ.2 லட்சம் பிணையத்தொகை, 2 முக்கியஸ்தர்களின் கையெழுத்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கார்த்திக் கவுடாவுக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், கூடிய விரைவில் போலீசார் முன்னிலையில் ஆஜராகி கார்த்திக் கவுடா தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு முதல், கார்த்திக் கவுடா தலைமறைவாக இருந்து வந்தார். முன்ஜாமீன் கிடைத்ததால் கைது பயமின்றி போலீசார் முன்னிலையில் அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை
இந்நிலையில் இன்று காலை 6.15 மணியளவில் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் கவுடா ஆஜரானார். அவரிடம் உதவி கமிஷனர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சுமார் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன்பிறகு அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கார்த்திக் கவுடாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மீடியாக்களிடம் தப்பிக்க
இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்த கார்த்திக் கவுடா இன்று போலீசில் முதன்முறையாக ஆஜராகியுள்ளார். மீடியாக்களின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக காலை 6.15 மணிக்கெல்லாம் அவர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல போலீசாரும் மீடியாக்களுக்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக மருத்துவ பரிசோதனைகளை முடித்து அனுப்பி வைத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications