காங். கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து என்னை தேர்வு செய்தால் பிரதமர் பதவியை ஏற்பேன்: ராகுல்
ராஞ்சி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து என்னை தேர்வு செய்தால் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று பல்வேறு துறையினருடன் நடத்திய உரையாடலில் ராகுல் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் நான் ஒரு சிப்பாய். லோக்சபா தேர்தலுக்கு முன்பு என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசின் வழக்கம் அல்ல. அதே நேரத்தில் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், நான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன்.
சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கீனம் நிலவுவது உண்மைதான். கட்சியில் ஒழுக்கத்தை புகுத்த நான் பாடுபட்டு வருகிறேன்.
காங்கிரசில் மேலிட கலாச்சாரம் நிலவுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பை மாநில காங்கிரஸ் தலைவரிடமே நான் ஒப்படைத்து வருகிறேன் என்றார்.