விசாகப்பட்டினம் ஏர்போர்ட்டில் 63 கிலோ தங்கம் பறிமுதல்: 55 தமிழர்கள் கைது
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 63 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கக்கட்டிகளை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த 55 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள விமான நிலையத்தில் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து சில்க் ஏர், ஏர் ஏசியா மற்றும் மலிந்தோ ஏர் விமானங்கள் வந்திறங்கின. அந்த விமானங்களில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் கடத்தி வந்த 63 கிலோ தங்கக்கட்டிகளை சென்னையைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளுக்கு இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விசாகப்பட்டினத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். தங்கத்தை கடத்தி வந்த 55 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகையில்,
கடத்தல்காரர்கள் 3 குழுக்களாக பிரிந்து கோலாலம்பூர் மற்றும் சிங்கபப்பூரில் இருந்து விமானத்தில் வந்துள்ளனர் என்றனர்.
மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த 10 பேர் எல்.இ.டி. டிவிக்கள் மற்றும் மைக்ரோவ் அவனில் வைத்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த மேலும் 25 பேரும் அவர்களை போன்றே தங்கக்கட்டிகளை எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த சில்க் ஏர் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.