செம்மரக்கடத்தலில் ரூ. 100 கோடி குவித்த சென்னை நபர்... துபாய் தப்ப முயன்றபோது மும்பையில் பிடிபட்டார்!
மும்பை: செம்மர கடத்தல் மூலம் 100 கோடி ரூபாய் குவித்த சென்னை நபரை துபாய் தப்பிச் செல்ல முயன்ற போது மும்பையில் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்துார், கடப்பா உட்பட சில மாவட்டங்களில் உள்ள வனங்களில் இருந்து, விலை உயர்ந்த செம்மர கட்டைகள் வெட்டப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் தொழிலில், ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு சிறப்புப் படை ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து செம்மர கடத்தலை தடுப்பதிலும், அதில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிப்பதிலும் ஆந்திர சிறப்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த கந்தசாமி வெங்கடேஷ் என்பவரை ஆந்திர போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது வெங்கடேஷ் அளித்த தகவல்களின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அசாருதீன் என்பவருக்கும் செம்மரக் கடத்தலில் முக்கிய தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஆந்திர போலீசார், துபாய் தப்பிச் செல்ல முயன்ற அசாருதீனை மும்பையில் கைது செய்தனர்.
கைதான அசாருதீனின் தந்தை பெயர் ஷாகுல் அமீது. சென்னையில் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த இவரும், செம்மர கடத்தலில் ஈடுபட்டவர் தான். இவர் மீது ஏற்கனவே ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருந்தபடி இவர், தன் மகன் அசாருதீன் மூலம் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த கங்கிரெட்டி மற்றும் ஷாகும் அமீது இருவரும் செம்மரக் கடத்தலில் அசாரூதினுக்கு கூட்டாளிகளாகச் செயல் பட்டு வந்துள்ளனர். இவர்கள் தற்போது மொரீஷியஸ் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அசாருதீனுக்கு ரூ. 100 கோடி அளவில் சொத்துக்கள் இருப்பதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். செம்மர கடத்தல் மூலம் சேர்த்த பணத்தில் தந்தையும், மகனும், சென்னையில் ரியல் எஸ்டேட் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர்.
தொடர்ந்து அசாருதீனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.