டெலிகாம் யுத்தம்.. அண்ணனுக்கு போட்டியாக அதிரடியாக களம் இறங்கிய தம்பி !
மும்பை: ஏர்செல் உடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இணைந்ததால் ஜியோ கொண்டு வந்துள்ள அதிரடி ஆஃபர்கள் போல் வருமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின்னர் அவரது புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் இணைந்து ரிலையன்ஸ் குழுமத்தை நடத்தி வந்தனர். இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு சொத்துக்கள் பிரிக்கப்பட்டன.
முகேஷ் அம்பானியின் கீழ் வந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனிடையே அண்மையில் ரிலையன்ஸ் ஜியோவை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தியப் பிறகு, பிற செல்போன் நிறுவனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறி வருகின்றனர்.
ஜியோ வருகையால் பல முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை ஈடுகொடுக்க, தங்கள் கட்டணங்களை குறைத்து வருகின்றனர். ஏற்கனவே பல அறிவுப்புகளை கொடுத்துள்ள ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மேலும் கட்டணங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷனோடு ஏர்செல்லை இணைத்துள்ளார். இதற்கான பேச்சுவார்தை கடந்த டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டாலும், ஜியோ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆர்.காம் - ஏர்செல் இணைப்பு துரிதப்படுத்தப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைவு காரணமாக 19 கோடி வாடிக்கையாளர்களுடன் தொலைத்தொடர்பு சேவையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மாறியுள்ளது. தொடர்ந்து 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய இணைப்பு காரணமாக பல புதிய அதிரடி அறிவுப்புகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல இண்டர்நெட் சேவை கிடைத்தால் நல்லது தான்.