இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய ஜிஎஸ்டி வரி விகிதம்.. விலை குறையும் பொருட்கள் இவைதான்
Recommended Video

டெல்லி: ஜிஎஸ்டியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் மக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், 250 பொருட்களுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், படிப்படியாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கடந்த வாரம் கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான 28 சதவீத வரி விகிதம் குறைக்கப்பட்டு
50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களும், ஆடம்பர பொருட்களுமே அந்த உயர் வரி விதிப்பு பட்டியலில் இருக்கின்றன. இது ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

குறைக்கப்பட்ட பொருட்கள்
சாக்லேட், மரச்சாமான்கள், சோப்பு, அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பூ, மார்பிள், டைல்ஸ், தொலைக்காட்சி, வானொலி சாதனங்கள், உள்ளிட்ட 178 பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டர் ஆகியவை 18 சதவிகித வரி விதிப்பில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

12 சதவீதம் வரி
பதப்படுத்தப்பட்ட பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவை ஏற்படுத்தாத உணவு, அச்சக மை, மூக்குக் கண்ணாடியின் ஃபிரேம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட 13 பொருட்களுக்கான வரி 18 % இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

கடலைமிட்டாய், பொரி உருண்டை
கடலை மிட்டாய், பொரி உருண்டை, சமையல் மிளகாய்ப்பொடி உள்ளிட்ட 6 பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி வலைகள், ஆடைகள், கயிறு உள்ளிட்ட 8 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவிகித வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

வரி ரத்து
உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட மீன் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவிகித வரி இப்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.












Click it and Unblock the Notifications