கலைஞர் டிவி வழக்கு: குற்றச்சாட்டுப் பதிவு தொடர்பாக அக். 20-ல் உத்தரவு- நீதிபதி ஓ.பி.சைனி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பாக அக்டோபர் 20-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி கைமாறியதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டதாக அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அமலாக்கப் பிரிவு.
இந்த குற்றப்பத்திரிகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான விவாதம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேற்றும் நடைபெற்றது. இதனனைத் தொடர்ந்து அக்டோபர் 20-ந் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி நேற்று தெரிவித்தார்.