கார்கேவை முதல்வராக்க கலகம் செய்யும் காங். எம்.எல்.ஏக்கள்.. சித்தராமையாவுக்கு சிக்கல்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு கோஷ்டி உருவாகியுள்ளது. சித்தராமையாவின் பதவியை காலி செய்துவிட்டு, மல்லிகார்ஜுன கார்கே அல்லது, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரை அந்த இடத்துக்கு கொண்டுவர சுமார் 25க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் முயற்சி செய்துவருவதும், அவர்களுக்கு அமைச்சர்கள் சிலரே ஆதரவு தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி செய்து வருகிறது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இருந்து சித்தராமையா மனக்கசப்பால் வெளியேறி 10 வருடங்கள் முன்புதான் காங்கிரசில் சேர்ந்தார்.
ஆனால், எடியூரப்பாவுக்கு ஈடான மக்கள் செல்வாக்கு இருப்பதால், அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் சோனியா காந்தி. அதேநேரம், பொதுத்தேர்தலின்போது, சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பியது. ஆரம்பம் முதல் காங்கிரசிலுள்ள மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவகுமார் (தற்போதைய மின்துறை அமைச்சர்), பரமேஷ்வர் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கே முதல்வர் பதவியை தர வேண்டும் என்று கலகம் எழுந்தது. ஆனால், சித்தராமையாவையே முதல்வராக்கினார் சோனியா.
இந்நிலையில், தனக்கு நெருக்கமானவர்களுக்கும், மஜதவில் இருந்து வந்தவர்களுக்கும் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை சித்தராமையா ஒதுக்கியதாக காங்கிரசின் எதிர்கோஷ்டியில் புலம்பல் சத்தம் கேட்க தொடங்கியது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகும் நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாதது, வாரியம் மற்றும் கழகங்களுக்கு தலைவர்களை நியமிக்காதது போன்றவற்றால் கோபமடைந்துள்ள ஒரு கோஷ்டி சித்து நாற்காலியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளது.
சுமார் 25 எம்.எல்.ஏக்கள், 3 அமைச்சர்கள் அவ்வப்போது நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து, திட்டம் வகுத்துவருவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. மக்களவை காங்கிரஸ் குழு தலைவரும், கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே அல்லது, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஷ்வர் ஆகிய இருவரில் ஒருவரை முதல்வராக்க முயற்சிகள் நடக்கின்றன. அவ்விருவருமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த வகையிலும் ஆதரவை திரட்ட கலகத்தில் ஈடுபடும் எம்.எல்.ஏக்கள் முயன்று வருகின்றனர். எனவே கர்நாடக அரசியல் சூடுபிடித்துள்ளது.