சபரிமலை: விடுதி அறை வாடகை 4 மடங்கு உயர்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
சபரிமலை: சபரிமலை தங்கும் விடுதிகளின் அறை வாடகை நான்கு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளதால், அங்கு செல்லும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டாலே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு, விரதம் இருந்து சபரிமலை தரிசனத்துக்கு கிளம்பி விடுவார்கள் பக்தர்கள். அந்த வகையில் இந்தாண்டு, சபரிமலைப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அங்குள்ள விடுதிகளின் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதிரடி உயர்வு...
சபரிமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் சில பக்தர்கள் நன்கொடையாகக் கட்டிக் கொடுத்தவையே. சமீபத்தில் புதுப்பிக்கப் பட்ட இந்த விடுதிகளின் அறை வாடகையை அதிரடியாக உயர்த்தியுள்ளது தேவஸ்தானம் போர்டு.
அறைவாடகை....
பொதுவாக நான்கு பேர் தங்கும் வசதியுடைய, அறை ஒன்றின் வாடகை, 400 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெபாசிட்....
அதோடு, அறை எடுக்கும் போது, 1,600 ரூபாய் டெபாசிட் என இருந்தது தற்போது , 3,200 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
கூடுதல் வாடகை...
அதேபோல், இந்த வாடகை, 12 மணி நேரத்துக்கு மட்டுமே. அடுத்த நான்கு மணி நேரத்திற்கு, 30 சதவீதம் கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.
கட்டண விவரம்...
மேலும், சபரிமலையில், மண்டல மகரவிளக்கு காலத்திலும், இதர மாத பூஜை நாட்களிலும், 40 வகையான பூஜைகள் நடத்தப்படுவதாகவும், அவற்றுக்கான கட்டண விவரங்களையும் தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.
அதிக கட்டணம்....
அதன்படி, மிகக் குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக பட்ச கட்டணம், படி பூஜைக்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.