பாஜக அலுவலகத்திற்கு "டெய்லி" ஒரு அமைச்சர் கட்டாயம் வந்து போக உத்தரவு!
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு தினசரி ஒரு அமைச்சர் கட்டாயம் வர வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை முதல் அதாவது நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான இடைவெளி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று பாஜக தலைமை கருதுகிறதாம்.
பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த யோசனையை தெரிவித்தாராம். இதை நாளை முதல் அமல்படுத்தவுள்ளது பாஜக தலைமை.
தொண்டர்களுடன் சந்திப்பு
மேலும் கட்சி அலுவலகத்திற்கு அமைச்சர்கள் வருவதன் மூலம் அவர்களை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் எளிதில் சந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், அவர்கள் தங்களது கருத்துக்களை அமைச்சர்களிடம் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் பாஜக கருதுகிறது.
முதல் போணி பொன். ராதாகிருஷ்ணன்
இந்த வாரத்திற்கான அமைச்சர்கள் வருகைப் பட்டியல் தயாராகி விட்டதாம். முதல் அமைச்சராக நாளை தமிழகத்தைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் கட்சி அலுவலகத்திற்கு வருவார். அவர் வரும் நேரம் நாளை மாலை 4 மணியாகும். 6 மணி வரை அலுவலகத்தில் அவர் இருப்பார்.
வியாழக்கிழமை சஞ்சீவ் குமார் பலியான்
வியாழக்கிழமையன்று மத்திய உணவுப்பதப்படுத்துதல் அமைச்சர் சஞ்சீவ் குமார் பலியான் வருகை தருவார்.
வெள்ளிக்கிழமை நிர்மலா
வெள்ளிக்கிழமையன்று வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு ஒருமுறை
ஒவ்வொரு அமைச்சரும், மாதம் ஒரு முறை அலுவலகத்திற்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது வாஜ்பாய் திட்டம்
ஆனால் இது மோடியின் யோசனையாக மட்டும் பார்க்க முடியாது. காரணம், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த முறையை அமல்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.