ரூ.1.35 கோடி செக் மோசடி வழக்கு: டிவி சீரியல் நடிகருக்கு போலீஸ் வலை
மும்பை: ரூ.1.35 கோடி காசோலை மோசடி செய்த வழக்கில் டிவி நடிகரும், எல்டர் பார்மா நிறுவனத்தின் சிஓஓவுமான அனுஜ் சக்சேனாவை மும்பை போலீசார் தேடி வருகிறார்கள்.
எல்டர் பார்மசுட்டிகல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்.டி. அலோக் சக்சேனா. அவரின் சகோதரர் அனுஜ் சக்சேனா அந்நிறுவனத்தின் சிஓஓவாக உள்ளார். அனுஜ் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மும்பை மரைன் லைன்ஸ் பகுதியில் உள்ள எம்.ஏ.கே. ஆம்பவ்ல்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அங்கோலா பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர் டாக்டர் அனில் அகர்வால் சக்சேனா சகோதரர்கள் மீது போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எல்டர் பார்மாவின் சக்சேனா சகோதரர்கள் தங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இரண்டு பேருடன் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் செயல்படாத வங்கி கணக்கில் இருந்து ரூ.1.35 கோடிக்கு எனக்கு காசோலை அளித்து மோசடி செய்துள்ளனர். எனவே சக்சேனா சகோதரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனில் கூறுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக என் நிறுவனம் எல்டர் பார்மாசுட்டிகல்ஸ் நிறுவனத்துடன் தொழில் செய்து வருகிறது. 2012ம் ஆண்டு முதல் நிதி வழியாகவும் உறவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எங்கள் நிறுவனம் எல்டர் பார்மாவில் பணத்தை போட்டால் அது எங்களுக்கு ஆண்டுக்கு 11.5 சதவீதம் வட்டி அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலீடு செய்தோம். அதன் பிறகு அடுத்த மாதமே ரூ.50 லட்சம் முதலீடு செய்தோம். இவ்வாறு 5 முறை முதலீடு செய்தோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால் அந்நிறுவனம் அதை செய்யவில்லை, எங்களுக்கு பணமும் ஒழுங்காக வழங்கவில்லை. கடந்த மார்ச் மாதம் வரை ரூ.9.3 லட்சம் மட்டுமே கிடைத்தது. வட்டி உள்பட ரூ.25 லட்சம் பாக்கி உள்ளது.
ஒருவழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்நிறுவனம் எங்களுக்கு அளிக்க வேண்டிய வட்டி, ரொக்கத்திற்கு ரூ.1.35 கோடிக்கு 5 காசோலைகள் அளித்தது. அந்த காசோலலைகளை வங்கியில் அளித்தால் அந்த கணக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மூடப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர் என்றார்.
அனில் அகர்வாலின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலோக் சக்சேனா மற்றும் யூசுப் கான் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அனுஜ் சக்சேனாவை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications