பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு இலவச சிகிச்சை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் தனியார் நிர்வாகங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பீர்பம் மாவட்டத்தின் சுபல்பூர் என்ற கிராமத்தில் 20 வயது பெண் வேறு சாதியை சேர்ந்த இளைஞருடன் காதல் கொண்டார். இதனால் கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி அந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் பலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் ஆங்கில நாளேடுகளில் செய்தியாக வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி பீர்பம் மாவட்ட நீதிபதி சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேற்கு வங்காள போலீஸ் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாநில தலைமை செயலாளர் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். தலைமை செயலாளர் தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் சில பிரச்சினைகள் இருப்பதை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணைகள் முடிவடைந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மாநில அரசு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். அந்த பகுதியின் சர்க்கிள் அதிகாரி தினமும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அந்த குடும்பத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இதுதவிர பொதுவாக, பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்களை போலீஸ் அதிகாரிகள் உடனடியாக முறையாக பதிவு செய்ய வேண்டும்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் தனியார் நிர்வாகங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications