மகரவிளக்கு பூஜைக்கு பின் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் யாத்திரை போகும் சபரிமலை பேப்பர் ஏஜெண்ட்!
பம்பை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் பம்பை, சபரிமலை சன்னிதானங்களில் மலையாள செய்தித் தாள் விநியோகிக்கும் பணியை இடைவிடாமல் செய்பவர் ஶ்ரீதரன். மகரவிளக்கு பூஜை முடிந்த கையோடு ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர் யாத்திரை செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
கொட்டும் மழையானாலும் பம்பையில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் மண்டலபூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலையில் செய்தித் தாள் விநியோகிக்கும் பணியை செவ்வனே செய்து வருபவர் ஶ்ரீதரன். வயநாட்டைச் சேர்ந்த ஶ்ரீதரன் சபரிமலை சீசன் காலத்தில் மட்டும் பம்பை, சன்னிதானத்தில் பார்க்க முடியும்.

மகரவிளக்கு பூஜை முடிந்து ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட உடனேயே ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் புனித யாத்திரைக்கு பயணம் சென்றுவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு 22 முறை சென்று வந்துள்ளார் ஶ்ரீதரன்.
கைலாசத்துக்கு 6 முறையும் அமர்நாத், காசி, கேதர்நாத்துக்கு 22 முறையும் யாத்திரையாக சென்று திரும்பியிருக்கிறார் இவர். ஒவ்வொரு மாதமும் திருப்பதி கோவிலுக்கு செல்வதை கடமையாகவும் வைத்திருக்கிறார் இந்த சபரிமலை ஶ்ரீதரன். தன்னுடைய 35 வயதில் இந்த யாத்திரையை தொடங்கியவர் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.
சபரிமலை சீசன் காலத்தில் கிடைக்கும் வருவாய் ஒன்றுதான் இவருக்கு வருமானம். பெரும்பாலான யாத்திரை ஸ்தலங்களில் ஆசிரமங்களில் தங்கி அங்கே வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பயணத்தை தொடருவாராம். சில ஆசிரமங்கள் இவரது பயணத்துக்கு நன்கொடையாகவும் வழங்கியும் இருக்கிறார்களாம். ஹரித்வார் கும்பமேளாவில் இவர் 3 முறை பங்கேற்றும் இருக்கிறாராம்.
இப்படியும் சில மனிதர்கள்!












Click it and Unblock the Notifications