சபரிமலை ஐயப்பன் கோயில் கொடிமரம் சேதம் சீரமைப்பு- திட்டமிட்டபடி கொடியேற்றம் என அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க கொடிமரம் சேதம் சரிசெய்யப்பட்டதால் திட்டமிட்டபடி கொடியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை : கேரள மாநிலம் சபரிமலையில் நிறுவப்பட்ட தங்க கொடிமரத்தின் அடி பகுதி சேதம் 3 மணி நேரத்திற்கு உழைப்பிற்குப் பின்னர் சரிசெய்யப்பட்டதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்குள்ள கோயில் கொடிமரம் சேதம் அடைந்ததையடுத்து திருவாங்கூர் தேவசம்போர்டு புதிய கொடிமரத்தை நிறுவ முடிவு செய்தது.
இதன்படி தேக்குமரத்தில் 40 உயரமுள்ள கொடிமரம் 9.16 கிலோ தங்கம், 300 கிலோ காப்பர், 17 கிலோ வெள்ளி கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட கொடி மரம் நேற்று கோயிலில் நிறுவப்பட்டது. சுமார் ரூ.3.2 கோடி செலவில் புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொடிமரம் சேதம்
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அந்த கொடிமரத்தின் அடிப்பகுதி சேதமடைந்திருப்பதை பார்த்து நிர்வாகமும், பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். கொடிமரத்தின் அடிப்பகுதியில் உள்ள தங்கம் ரசாயனம் இல்லது பாதரசம் தெளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பாதரசம் வீச்சு?
பாதரசத்தில் தோய்யப்பட்ட துணியை யாரோ கொடிமரத்தின் கீழ்பகுதியில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறத. இது திட்டமிட்டே செய்யப்பட்டதா அல்லது கைதவறி விழுந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 பேரிடம் விசாரணை
இதனிடையே மர்ம நபர்கள் தங்க கொடிமரத்தின் மீது ஏதோ ரசாயனம் தெளிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதத்தின் பின்னணி என்ன?
எனினும் கொடிமரம் மதியம் வரை சேதப்படுத்தப்படாமல் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சேதம் விஷமிகளின் செயலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் கூறியுள்ளார். ஜுன் 28ம் தேதி ஐயப்பன் கோவில் நடை 10 நாள் திருவிழாவிற்காக திறந்துவிடப்பட்டு ஜூலை 7ம் தேதி ஆராட்டு விழாவோடு மீண்டும் நடை சாத்தப்பட உள்ளது. இந்நிலையில் கொடிமரம் சேதப்படுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே களக்கத்தை ஏற்படுத்தியது.
சேதம் சரிசெய்யப்பட்டது
இந்நிலையில் கொடிமரத்தின் அடிப்பகுதி சேதம் சரி செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருமலா அனந்தன் அச்சாரி தலைமையிலான குழுவினர் 3 மணி நேரம் போராடி கொடிமரத்தின் அடிப்பகுதியில் உள்ள பாதரசம் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பழைய பொலிவை கொடிமரம் பெற்றுள்ளதோடு திட்டமிட்டபடி நாளை மறுதினம் கொடியேற்றம் நடைபெறும் என்றும் தேவசம்போர்டு கூறியுள்ளது.