சாரதா மோசடி வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் மிதுன் விடுவிப்பு
கொல்கத்தா: சாரதா நிதிநிறுவன மோசடிக்கும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்திக்கும் தொடர்பு இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
சாரதா மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரபர்த்தியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சாரதா நிறுவனத்திற்கு சொந்தமான சேனல் 10 தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி நடத்த அவர் ரூ.1.76 கோடி வாங்கினார். அந்த நிகழ்ச்சியை நடத்த அவருக்கு சாரதா நிறுவன தலைவர் சுதிப்தோ சென் பணத்தை அளித்துள்ளார். ஆனால் பணம் வேறு ஆள் மூலம் மிதுனுக்கு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் மிதுனிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் ரூ.1.76 கோடி பெற்றதை எழுத்துப்பூர்வமாக அளித்தார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யான மிதுன் சக்ரபர்த்திக்கும், சாரதா ஊழலுக்கும் தொடர்பு இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட நடிகை அர்பனா சென்னும் குற்றமற்றவர் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகை அர்பனா சென்னுக்கும், சாரதா நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் ஆகியவை விசாரணை நடத்தின. சாரதா நிறுவனம் நடத்திய பத்திரிக்கையில் அர்பனா ஆசிரியையாக இருந்துள்ளார். அதனால் தான் அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையேயான தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மிதுன் மற்றும் அர்பனாவிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் தங்களுக்கும் சாரதா நிறுவனத்திற்கும் இடையே எந்தவித தனிப்பட்ட தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.