சசிகலாவின் போலி சாம்ராஜ்யம் அம்பலம்! நிறுவனங்களை முடக்கி இயக்குநர் பொறுப்பை பறித்த மத்திய அரசு
Recommended Video
டெல்லி: சசிகலா நடத்தி வந்த 4 போலி நிறுவனங்கள் முடக்கப்பட்டு அவற்றின் இயக்குநர் பொறுப்பு வகித்த சசிகலா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய அளிக்கப்பட்ட 50 நாள் அவகாசத்தின்போது 2,138 போலி நிறுவன கணக்குகளில் மொத்தம் ரூ.1,321 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சுமார் 2.1 லட்சம் போலி நிறுவன பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இவற்றில் பெரும்பாலானவை நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாதவையாகும்.
பல இயக்குநர்கள் சிக்கினர்
இதையடுத்து நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாக 1,06,578 இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பலப்படுத்திய மத்திய அரசு
இவ்வாறு முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பெயர்களை அந்த போலிகளை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வகையில் மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சசிகலா, உம்மன் சாண்டி
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, தொழிலதிபர் யூசுப் அலி ஆகிய பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சசிகலாவின் போலி நிறுவனங்கள்
பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அரண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்திய போலி நிறுவனங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசியும் இயக்குநர்
இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தில் சசிகலாவுடன், இளவரசி, குலோத்துங்கன் ஆகியோரும் இயக்குநர்களாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் அதே நிறுவனத்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலலோ 5 ஆண்டுகளுக்கு இயக்குநர் உட்பட எந்த பொறுப்பும் வகிக்க முடியாது .