சசிகலா ஜெ.வின் பினாமி அல்ல- சொத்து மதிப்பும் மிகையானது: சுப்ரீம்கோர்ட்டில் சசி வக்கீல் வாதம்
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது தோழி சசிகலாவின் சொத்து மதிப்பு மிகையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது இறுதிவாதங்களை முன்வைத்தார். அவர் முன்வைத்த வாதம்:
306 சொத்துகள்
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அரசு சான்று ஆவணத்தின்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 306 சொத்துகள் இருக்கின்றன. இதில் சுதாகரனுக்கும் இளவரசிக்கும் மட்டும் 63 சொத்துகள் இருக்கின்றன. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 38 லட்சத்து 31 ஆயிரத்து 961 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மிகை மதிப்பீடு
இதே போல இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 6 கோடியே 91 லட்சத்து 81 ஆயிரத்து 200 என கூறப்பட்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மதிப்பீட்டு அதிகாரிகள் சுதாகரனும் இளவரசியும் பங்குதாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராப்பர்டீஸ், ரிவர்வே அக்ரோ உள்ளிட்ட 6 நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்தனர். கட்டிட மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, இயந்திரங்களின் மதிப்பு ஆகியவற்றை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்தனர். கட்டப்படாத கட்டிடங்களுக்கும் இயங்காத நிலையில் இருந்த வாகனங்களுக்கும்கூட மிகைப்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பினாமி என தவறான தீர்ப்பு
இதன் மூலம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ12.90 கோடி எனவும் தனியார் நிறுவனங்களின் மதிப்பு ரூ. 4.60 கோடி எனவும் மதிப்பிட்டுள்ளனர். இதை அடிப்படையாக வைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டனர். இந்த சொத்துகள் யாவும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.
பினாமி ஆதாரம் இல்லை..
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மிகையான மதிப்பீடு மூலமே பெங்களூரு நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது.
இவ்வாறு நாப்டே வாதிட்டார்.
இன்றும் இந்த வழக்கின் விசாரணை தொடர உள்ளது.