ப்ளூவேல் விளையாட்டுக்கு நாடு முழுவதும் தடை... பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
ப்ளூவேல்விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்து 3 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ப்ளூவேல் விளையாட்டுக்கு நாடு முழுவதும் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 3 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளைஞர்களின் வாழ்வில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இணையதள விளையாட்டான ப்ளூவேல் பெற்றோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் விளையாடும் இந்த விளையாட்டின் மூலம் இளைஞர்கள் தற்கொலை வரை செல்வதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரையில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன் ப்ளூவேல் விளையாட்டிற்கு பலியானதையடுத்து இதன் வீரியம் தமிழக மக்களுக்கும் தெரியத் தொடங்கியது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலரும் விளையாட்டில் இருந்து மீட்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பொன்னையா என்பவர் நாடு முழுவதும் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். செல்போனில் இணையதள உதவியுடன் விளையாடப்படும் இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை வரை தூண்டப்படுவதை தவிர்க்கும் விதமாக நடவடிக்கை தேவை என மனுவில் பொன்னையா வலியுறுத்தியிருந்தார்.
ப்ளூவேல் விளையாட்டு குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது ப்ளூவேல் விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.