மணல் குவாரிகளை மூடும் ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை!
6 மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூடும் ஹைகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டெல்லி : தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்று ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் கட்டுமான பணிகள் பாதிக்கப்படவதால் தடையை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மணல் தட்டுப்பாடு இருப்பதால் ராமையா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மணலை இறக்குமதி செய்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.

தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவையும் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதி கல்யாணசுந்தரம், தாரணி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதி மதன் பி. லோகூர், நீதிபதிகுப்தா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மணல் குவாரிகள் மூடல் உத்தரவால் வீடு கட்டும் கட்டுமானப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குவாரிகள் மூடல் அறிவிப்பால் பலர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதால் ஹைகோர்ட்டின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது. இதனையேற்ற நீதிபதிகள் ஹைகோர்ட் அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளனர்.
ராமையா என்டர்பிரைசஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம் 2 வாரத்தில் மணல் இறக்குமதி குறித்து பதிலளிக்குமாறு தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications