பன்னீர்செல்வம் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தது நியாயம்தானோ?
டெல்லி: கோவாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துள்ளது.
அதிமுகவில், பன்னீர்செல்வம் அணியினர் கேட்டுக்கொண்ட இதேபோன்ற கோரிக்கையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் புறந்தள்ளியது நியாயம்தான் என்பதை சுப்ரீம் கோர்ட் உத்தரவு நிரூபிக்கிறது.
கோவாவில் மொத்தமுள்ள 40 பேரவை தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியுமே வெல்ல முடியவில்லை என்ற நிலையில் சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியது.
காங்கிரஸ் வழக்கு
மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு இன்று பதவியேற்க திட்டமிட்டுள்ள நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசைதான் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் என கூறி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு போடப்பட்டது.
ஆளுநர் முடிவு
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஹேகர் மற்றும் தருண் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. காங்கிரசிடம் போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இருந்திருந்தால் அதை ஆளுநரிடம் அளித்திருக்க வேண்டும். பாஜகவிடம் பலம் இருப்பதாக கூறுவதால் ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்துள்ளார், அதில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என கூறிவிட்டனர் நீதிபதிகள்.
காலக்கெடு குறைப்பு
பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களுக்கு பாஜகவுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது குதிரை பேரத்திற்கு வாய்ப்பளிப்பதை போலவாகிவிடும் என்று காங்கிரஸ் சார்பில் வாதிடப்பட்டது. எனவே நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காங்கிரஸ் கோரிக்கை
அதேநேரம், காங்கிரஸ் சார்பில், மற்றொரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் அதே நேரத்தில் காங்கிரசுக்கும் வாய்ப்பு தர வேண்டும். யாருக்கு அதிக எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது என்பதை நிரூபிக்க அதுதான் நியாயமாக இருக்கும் என்பதே அக்கோரிக்கை. இதை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.
பன்னீர்செல்வம் கோரிக்கை
இதேபோன்ற ஒரு கோரிக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவினரால் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை. கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார்.
நியாயம்தானோ?
அதேபோல தன் தரப்புக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பு தர வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஆளுநர் நடவடிக்கை கேள்விக்குறியாக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டும் அதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.