சசிகலாவின் தலை தப்புமா.. சொத்து குவிப்பு வழக்கில் 14-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு?
சசிகலா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வரும் 14-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 14-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.
இத்தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து ஹோட்டலில் அடைத்து வைத்துள்ளார். ஆனால் ஆளுநரோ இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இதனிடையே வரும் 14-ந் தேதியன்று இவ்வழக்கில் தீர்ப்பு வரும் என உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications